Thursday, September 27, 2012

நீர் எரிச்சல் குணமாக காக்கரட்டான்

நீர் எரிச்சல் குணமாக காக்கரட்டான்-சங்குப் பூ


கூட்டு இலைகளையும், நீல நிற மலர்களையும் கொண்ட ஏறு கொடி இனமாகும். இதன் காய்கள் தட்டையாக இருக்கும். வெள்ளைப்பூ பூக்கும் காக்கரட்டான் கொடியே மிகுந்த மருத்துவக் குணம் கொண்டது. இலை, வேர், விதை ஆகியவை மருத்துவக் குணம் கொண்டவை. தமிழகம் எங்கும் வேலிகளில் இயற்கையாகவே வளர்கின்றது.
வேறு பெயர்கள் : மாமூலி, காக்கணம், காக்கட்டான், சங்குப் பூ.
வகைகள் : கறுப்பு காக்கரட்டான், வெள்ளை காக்கரட்டான்.
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம். காக்கரட்டான் இலைச்சாறு, இஞ்சிச் சாறு, தேன் சம அளவாக எடுத்து கலந்து 1 தேக்கரண்டியளவு (5 மில்லி) 2 வேளை குடித்து வர உடல் சூடு தணிந்து, இரவிலும் மற்றும் மழைக்காலத்தில் வருகின்ற அதிகப்படியான வியர்வை நீங்கும்.
காக்கரட்டான் பச்சையாக இருக்கும் வேர் 40 கிராம் ஒன்றிரண்டாக இடித்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லி வீதம் 2 மணிக்கு ஒரு முறை வீதம் 6 தடவை குடித்து வர காய்ச்சல், தலை வலி குணமாகும்.
காக்கரட்டான் வேரைப் பாலில் அவித்து, பாலோடு அரைத்துச் சுண்டைக்காய் அளவு 2 வேளை 1 டம்ளர் பாலில் கலந்து குடித்து வர மேக வெள்ளை, பிரமேகம், தந்தி மேகம், சிறுநீர்ப் பாதை அழற்சி, நீர் எரிச்சல் குணமாகும்.
வெள்ளை காக்கரட்டான் வேர், கட்டுக் கொடி இலை, கீழா நெல்லிச்ச மூலம், பெரு நெருஞ்சில் இலை, அருகம்புல் வகைக்கு ஒரு கைப்பிடியளவுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் தயிருடன் கலந்து குடிக்க எவ்வளவு நாட்பட்ட வெள்ளை ஒழுக்காக இருந்தாலும் குணமாகும்.
காக்கரட்டான் விதையை நெய்யில் வறுத்து இடித்துப் பொடியாக்கி 1/2 சிட்டிகை அளவு வெந்நீருடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வர இழுப்பு, மூர்ச்சை, நரம்பு இழுப்பு குணமாகும்.
காக்கரட்டான் விதைப் பொடி 50 கிராம், இந்துப்பு 50 கிராம், சுக்குப் பொடி 25 கிராம் கலந்து தினமும் காலையில் மட்டும் 3 கிராம் அளவு சாப்பிட்டு வர மலப்போக்கு அதிகமாகி, யானைக்கால் வீக்கம் படிப்படியாக குறையும். மேலும் காக்கரட்டான் இலையை விளக்கெண்ணையில் வதக்கிக் கட்ட வீக்கம் குறைந்து வரும்.
வெள்ளைக் காக்கரட்டான் வேரை தயிர் விட்டு அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட்டுவிட்டு அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் பசும் மோர் வரை குடிக்க 6 அல்லது 8 முறை பேதியாகும். மோரைக் குடித்தால்தான் பேதியாகும். பகலில் தயிர்ச்சாதமும், இரவில் பால் சாதமும் சாப்பிட ஒரே நாளில் வெள்ளை குணமாகும்.

No comments:

Post a Comment